குளத்தில் போதிய நீர் இருந்தும் நீரின்றி அல்லலுரும் மக்கள்!

Share

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றாகிய முத்துஐயன்கட்டு குளத்தில் தற்போது 23 அடி நீர்மட்டம் காணப்படுகிறது முன்னைய காலங்களை விட இவ் வருடம் குளம் முற்று முழுதாக நிரம்பி குளத்தில் தேவையான நீர் காணப்படுகின்ற போதும் உரிய வகையில் தமக்கான நீர் விநியோகம் இடம்பெறாமை காரணமாக தங்களுடைய பயிர்கள் அனைத்தும் அழிவடைவதாகவும் அத்தோடு தங்களுடைய கிணற்றில் குடிநீர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இருப்பினும் தமக்கு நீரை திறந்து தருவதற்கு உரிய அதிகாரிகளை அனுகியும் இதுவரை எந்த தீர்வும் எட்டவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

குளத்து கட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள காணியில் உள்ள கிணற்றில் குடிநீருக்கு கூட தண்ணீர் இல்லாத இக்கட்டான நிலைமை இருந்தும் அதிகாரிகள் கண்மூடித்தனமாக இருக்கின்றதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இவ்வாறான நிலையில் மக்கள் தமக்கான நீரை பெற்று தருமாறு பல்வேறு கோரிக்கைகளை விடுத்த பின்னணியிலும் இதற்கான முடிவுகள் எட்டப்படாத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கு கிராமத்தில் தண்ணீர் பாதிப்பை எதிர்கொண்டுள்ள மக்கள் தங்களது நிலைப்பாடுகளை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவ மோகன் அவர்கள் அதிகாரிகளோடு கலந்துரையாடியதற்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்ட நீர்பாசன பொறியியலாளர் மற்றும் முத்துஐயன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் குறித்த பகுதிக்கான தொழில்நுட்ப உத்தியோகத்தர் உள்ளிட்டவர்களும் சிவப்பிரகாசம் சிவமோகன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோரும் குறித்த முத்துஐயன்கட்டு குளப்பகுதிக்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது மக்கள் தமக்கு உரிய நீரினை திறந்து விடாமை காரணமாக பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பில் இதன்போது கருத்து தெரிவித்தனர் பிரதான வாய்க்கால்களில் நீர் திறந்து விடப்பட்டிருக்கின்ற போதும் கிளை வாய்க்கால்களில் நீர் திறக்காமல் இருப்பதால் தாம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

குறித்த நீர் திறப்பதில் ஒப்பந்த வேலைகள் பூர்த்தியாக்கப்படாத காரணமும் காணப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஒப்பந்தக்காரர்களுடைய வேலைகள் இடம்பெறாத பகுதிகளிளாவது தமக்கான நீரை பெற்று தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இவ்வாறான பின்னிலையில் மக்களின் கோரிக்கையை எழுத்து மூலம் தருமாறும் உரிய அமைப்புகளை அழைத்து மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் தீர்மானம் எடுத்தே 31 ஆம் திகதி நீர் திறப்பதாக தீர்மானிக்கப்பட்டதாகவும் அதற்கு முன்பதாக நீர் திறப்பதற்கு அரசாங்க அதிபருடைய அனுமதியை பெற வேண்டும் எனவும் ஆகவே எழுத்து மூலம் உரிய அமைப்புகள் ஊடாக கடிதத்தை தருமாறும் தான் அரசாங்க அதிபரோடு கலந்துரையாடி விரைவில் உங்களுக்கான நீரினை பெற்று தருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக முல்லைத்தீவு மாவட்ட நீர்பாசன பொறியியலாளர் உறுதி அளித்து சென்றார்.

இருப்பினும் குறித்த இடத்தில் அதிகாரிகளின் திட்டமிட்ட செயற்பாடுகள் காரணமாகவே இவ்வளவு நாளும் தாங்கள் இவ்வாறு பாடுபட்டு உழைத்த பயிர்கள் அனைத்தும் அழிவடைந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குடிநீருக்கு கூட கிணத்தில் நீரில்லாத நிலைமையை இருந்தும் அதிகாரிகள் இவ்வாறு அசமந்த போக்குடன் செயல்படாது மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

தமக்கு இவ்வாறு வரட்சி ஏற்படுகின்ற போது 15 நாட்களுக்கு ஒரு தடவை நீரை திறந்து தருவது வழமையான செயற்பாடு எனவும் கால்நடைகளுக்கு கூட நீர் இல்லை எனவும் வேண்டும் என்றே விதிமுறைகள் எல்லாவற்றையும் மீறி தமக்கான நீர் இன்னும் கிடைக்காத நிலையில் அல்லலுருவதாகவும் ஆகவே மிக விரைவில் தங்களுக்கான நீரினை திறந்து தமக்கான தீர்வினை பெற்று தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு