தமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக தமிழ் மக்கள் போராட்ட களத்தில் இறங்க வேண்டும்!

Share

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க மாட்டார்கள் என்று தமிழ் தேசிய கட்சிகள் கூறுவது அவர்கள் முழுக்க முழுக்க தமிழ் அரசியலுக்கு செய்யும் பச்சை துரோகம் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும்இ விரிவுரையாளருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழக்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு எதிராக போராட வேண்டிய நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் அக்கறையற்ற நிலையையே காட்டி வருகின்றன.

அக்கறையற்ற நிலை என்பதை விட முரண்பாடான நிலை எனக் கூறலாம். சுரேஸ் பிரேமச்சந்திரனையும், விக்கினேஸ்வரனையும் தவிர ஏனையவர்கள் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆதரவாக இல்லை. புளொட்டும், ரெலோவும் ஆதரவாக உள்ளனர் என சுரேஸ்பிரேமச்சந்திரன் கூறினாலும் அவ் இரண்டு தரப்பும் ரணிலை ஆதரிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.

இக்கட்சிகளின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிரான கருத்துக்களையே கூறி வருகின்றனர்.

குறிப்பாக புளொட் கட்சியின் இரண்டாம் மட்டத்தலைவாரான கஜதீபனும், ரெலோ கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவரான விந்தனும் எதிரான கருத்துகளையே பிரசாரம் செய்கின்றனர்.

சுரேஸ் பிரேமச்சந்திரனும், விக்கினேஸ்வரனும் மட்டும் வெளிப்படையாக கருத்துக்களை கூறுகின்றனர். எனினும் இதனை செயல் வடிவில் முன் கொண்டு செல்வதற்கான எந்த முயற்சியும் இதுவரையில்  எடுக்கவில்லை.

தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் பிரிவு சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது பற்றி வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ளது.

இவ்வணியில் உள்ள வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தமிழ் பொது வேட்பாளருக்கு எதிரான கருத்துக்களை பொது வெளியில் கூறி வருகின்றார்.

இவர்களை விட அரசியல் முக்கியஸ்தரான அருந்தவபாலன் தமிழ்ப்பொது வேட்பாளருக்கு எதிரான கருத்துக்களை கட்டுரை வடிவில் வெளியிட்டிருக்கின்றார்.

அரசியல் பிரமுகர்களை விட தமிழ் நடுத்தர வர்க்க கல்வியாளர்களிடமும் தமிழ் பொது வேட்பாளருக்கு எதிரான கருத்தே மேலோங்கி உள்ளது.

இவர்கள் தேசிய மட்ட தேர்தல்களில் மரபு ரீதியாகவே ஐக்கிய தேசியக்கட்சியை ஆதரிப்பவர்கள்.

இந்த அணி ஏனைய தேர்தல்களில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களையே ஆதரிக்கின்றது. ஜனாதிபதி தேர்தல்களில் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர்களை ஆதரிக்கின்றது. கொழும்புடன் தொடர்புடைய தமிழ் மேட்டுக் குடியினர் கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கின்றனர். வடக்கு – கிழக்கில் தமிழரசுக்கட்சியை ஆதரிக்கின்றனர்.

தமிழரசுக் கட்சியின் சிறீதரன் பிரிவு தமிழ்ப் பொது வேட்பாளர் பற்றி வெளிப்படையாக கருத்துக்கள் எவற்றையும் பெரியளவிற்கு முன்வைக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தல் வரும் போது பார்க்கலாம் என்பதே அவர்களது நிலைப்பாடாக உள்ளது. தற்போது அவர்கள் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ போட்டியில் மூழ்கிக் கிடப்பதால் தமிழ் பொது வேட்பாளர் பற்றி பேசுவதற்கோ சிந்திப்பதற்கோ அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.

தவிர இந்த அணியினர் இந்திய சார்பு நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். இதனால் இந்திய கட்டளை வரும் வரை பொறுத்திருப்பார்கள் போல தெரிகிறது.

அரசியல் கட்சிகளுக்கு வெளியே தமிழ் சிவில் சமூக மட்டத்தில் தான் தமிழ் பொது வேட்பாளர் விடயம் அதிகம் பேசுபொருளாகியுள்ளது.

சிவில் சமூக வெளியில் செயற்பாட்டாளர்களாக இருப்பவர்கள். தமிழ் பொது வேட்பாளர் அவசியம் என உணர்ந்து கருத்துக்களை கூறி வருகின்றனர். தமிழ் சிவில் சமூக அமையம், யாழ் பல்கலைக்கழக மாணவர் மன்றம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், குரலற்றவர்களின் குரல் அமைப்பு என்பன தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படல் வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையாக உள்ளன.

தமிழ் கருத்துருவாக்கிகளில் பெரும்பான்மையினரும் இதே கருத்துக்களை கொண்டுள்ளனர். தமிழ் இளைஞர்கள் பலரிடமும் இக்கருத்து உள்ளது. இத்தரப்பினர் இன்னமும் ஒன்று திரண்டு ஒரு சக்தியாக தமது கருத்துக்களை வெளிப்படுத்தவில்லை. பல அமைப்புக்கள் மக்கள் மத்தியில் இது பற்றிய கருத்தரங்குகளை வைப்பதற்கு முயற்சித்து வருகின்றன.

தமிழ் பொது வேட்பாளரை எதிர்க்கும் தமிழ் தேசியக் கட்சிகளை சேர்ந்தவர்கள் தமது எதிர்ப்பு நிலைக்கு இரண்டு காரணங்களைக் கூறி வருகின்றனர். இதில் ஒன்று பெரும்பான்மை தமிழ் மக்களை தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி திரட்ட முடியாது என்பதாகும்.

இரண்டாவது வெளிப்படையாக பேரம் பேசக்கூடிய நிலை இன்று இல்லை என்பதாகும். இந்த இரண்டு நிலைப்பாடுகளும் அடிப்படையற்றது. தவறானது. முதலாவது காரணத்தை பொறுத்தவரை தமிழ் பொது வேட்பாளரை பெரும்பான்மை தமிழ் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என கூற முடியாது.

சகல தமிழ்த் தேசியக்கட்சிகளும் ஒருங்கிணைந்த வகையில் தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்துவார்களாயின் மக்கள் ஆதரிக்கவே முற்படுவர்.

ஏற்கனவே 1981 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரிய பிரச்சாரங்கள் எதுவும் இல்லாமலேயே குமார் பொன்னம்பலத்தை ஒன்றரை லட்சம் வாக்காளர்கள் வரை ஆதரித்திருந்தனர். மக்களுக்கு சரியான தெளிவூட்டல்களை வழங்கினால் ஆதரிப்பதற்கு அவர்கள் ஒரு போதும் பின்னிற்க மாட்டார்கள்.

இங்கே இன்னோர் விடயமும் முக்கியம். தலைவர்கள் எப்போதும் மக்களுக்கு முன்னே செல்ல வேண்டுமே ஒழிய மக்களுக்கு பின்னால் செல்லக்கூடாது. தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக தர்க்கரீதியான தெளிவூட்டல்களை மக்களிடம் வழங்குவதற்கு தலைவர்கள் முதலில் தயாராக வேண்டும்.

தலைவர்கள் தயாரானால் மக்களும் தயாரான நிலையை எடுப்பார்கள். இங்கே தங்கள் இயலாமைக்கு மக்களைக் காரணம் காட்டுவது பொருத்தமற்றது.

தமிழ்த்தேசியக்கட்சிகளில் இன்னோர் தரப்பினர் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருங்கிணைந்த செயற்பாட்டிற்கு வரமாட்டார்கள் என்பதை காரணமாகக் கூறுகின்றனர்.

இதில் சில உண்மைகள் இருக்கலாம். தமிழப்பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உண்மையாகவே விசுவாசமாக இருக்கின்ற கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவாக விளக்கி மக்களையும் இணைத்துக் கொண்டு ஏனைய கட்சிகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கலாம்.

இந்த அழுத்தங்களுக்கு ஏனைய கட்சிகள் பணியவில்லை என்றால் அவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்தலாம்.

இங்கே முக்கிய விடயம் மற்றக் கட்சிகளைக் காரணங்களாகக் கூறுவதை விட தங்கள் நிலைப்பாட்டை உறுதியாக கொண்டு செல்வதே!

மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் கட்சிகள் ஆதரிக்க மாட்டா எனவே சிங்கள வேட்பாளரை ஆதரிப்போம் என கூறுவது முழுக்க முழுக்க தமிழ் அரசியலுக்கு செய்யும் பச்சை துரோகமே.

பேரம் பேசுதல் சாத்தியமில்லை என்ற இரண்டாவது காரணத்தை அவர்கள் முன்வைக்கும் போது சிங்களக்கட்சிகள் எவையும் தமிழ்த்தரப்புடன் வெளிப்படையாக பேரம்பேச முன்வராது. அவ்வாறு வந்தால் சிங்கள வாக்குகள் அவர்களுக்கு கிடைக்க மாட்டாது எனக் கூறுகின்றனர்.

இந்த விவகாரத்தில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை ஒன்று பேரம் பேசல் பற்றியது இரண்டாவது சிங்கள மக்களைத் தயார் படுத்துவது தொடர்பான பொறுப்புப்பற்றியது. தமிழ் மக்களின் வாக்குகள் தான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்ற நிலை வந்தால் சிங்களக்கட்சிகள் என்னதான் நெருக்கடி வந்தாலும் பேரம்பேசுதலுக்கு வந்தே தீருவார்கள்.

அவற்றிற்கு அவை தவிர வேறு தெரிவுகள் இருக்காது. இவை இவ்வளவு காலமும் வராமல் இருக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் தமிழ் மக்கள் வெற்றுக்காசோலையில் கையெழுத்திட்டு தருவார்கள் என்ற நம்பிக்கையே! இந்த நம்பிக்கை ஐக்கியதேசியக்கட்சிக்காரர்களுக்கு நிறையவே இருக்கிறது ரணிலிடம் மிக அதிகமாக இருக்கிறது எனலாம். முதலில் இந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும்.

தவிர இக்கட்டுரையாளர் முன்னைய கட்டுரைகளில் தெரிவித்தது போல இன்று இலங்கைத்தீவு வல்லரசுகளின் புவிசார் பூகோள அரசியல் போட்டிக்குள் உள்ளது. இதனால் வல்லரசுகள் தங்களது நலன்களிலிருந்து குறிப்பிட்ட வேட்பாளர் வெல்வதையே விரும்பும். அதற்காக அவை அனைத்து வழிகளிலும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வல்லரசுகளில் அமெரிக்க தலைமையிலான மேற்குலக – இந்தியக்கூட்டு ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவதையே விரும்புகின்றது.

இக்கூட்டு நகர்த்திவரும் இந்தோ – பசுபிக் மூலோபாய திட்டத்திற்கு ரணிலே பொருத்தமானவர் என அது கருதுகின்றது. ரணிலும் அதற்கேற்ற வகையில் செங்கடலுக்கு கப்பலை அனுப்பி இக்கூட்டை மகிழ்வித்திருக்கின்றார். இந்தக்கூட்டு அண்மைக்காலமாக ரணிலையும் , சஜித் பிரேமதாசவையும் இணைப்பதற்கு முயற்சித்து வருகின்றது.

ரணில் ஜனாதிபதியாகவும் சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதுமே அவற்றின் இலக்கு. இந்த இணைப்பை ஏற்படுத்துவற்கு மனோ கணேசனும் , ரவூப் ஹக்கீமும் அனுசரணையாளராக இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

ஆனால் சஜித்பிறேமதாசா இதற்கு பச்சை கொடியை இன்னமும் காட்டவில்லை தொடர்ச்சியாக நிராகரித்தே வருகின்றார். ரணிலுடன் இணைவது அரசியல் தற்கொலைக்கு சமமானது என சஜித்பிறேமதாசா கருதுவது போலத் தெரிகிறது

அதே வேளை இந்தத் தடவை சீனா ஜே.வி.பி.வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கா ஜனாதிபதியாக வருவதை விரும்புவது போல தெரிகின்றது. பெருந்தேசிய வாக்குகள் இந்தத் தடவை அனுரகுமாரதிசநாயக்காவை நோக்கியே திரும்பும். பெருந்தேசியவாத காவலராக இருந்த ராஜபக்சாக்கள் இன்று சிங்கள அரசியலில் காலாவதியாகி உள்ளனர்.

இன்று பெருந்தேசியவாதிகளுக்குள்ள வலுவான தெரிவு அனுரகுமார திசநாயக்கா தான். பெருந்தேசியவாதம் மேற்குலக எதிர்ப்பு , இந்திய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு ஆகிய மூன்று தூண்களில் தான் கட்டப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் இந்த மூன்று தூண்களையும் பேணக்கூடிய தரப்பு ஜே.வி.பி.தான்

எனவே தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட போகின்றார் அவருக்கு பெரும்பான்மை தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்கப்போகின்றது என தெரியவந்தாலே இந்த வல்லரசுகள் தமிழ் மக்களை நோக்கி ஓடி வரும். குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான மேற்குலக – இந்திய கூட்டு ஓடி வரும். அப்போது அதனுடன் தமிழ் மக்களின் நிலை நின்று பேரம் பேசலாம்.

அடுத்த விடயம் சிங்கள மக்களை பேரம்பேசுதல் தொடர்பாக தயாராக்குவது சிங்களக் கட்சிகளின் பொறுப்பேயாகும். அது இயலாது என அவர்கள் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்க முடியாது. அவர்களது பொறுப்பை தமிழ் மக்கள் தலையில் சுமக்க வேண்டியதில்லை. அதற்காக குத்தி முறிய வேண்டிய அவசியம் இல்லை.

உண்மையில் தமிழ்த்தேசிய கட்சிகள் எதிர்ப்பதற்கு காரணம் அவை சுயாதீன இருப்பை கொண்டிராமையே ஆகும். தமிழ்த்தேசிய கட்சிகளில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை தவிர ஏனையவற்றிற்கு சுயாதீன இருப்பு கிடையாது. அவை ஒன்றில் இந்தியா சார்பானவையாகவோ அல்லது மேற்குலகம் சார்பானவையாகவோ தான் உள்ளன. சம்பந்தன் , சுமந்திரன் , சாணக்கியன் போன்றோருக்கு தென்னிலங்கையிலும் இருப்பு உண்டு. சம்பந்தன் கொழும்பில் உள்ள தனது சொகுசு வீட்டை இழக்க ஒரு போதும் விரும்ப மாட்டார்.

இரண்டாவது காரணம் சிங்களக் கட்சிகளோடு இவர்களுக்குள்ள இரகசியமான உறவுகள் ஆகும். இந்த உறவுகள் வெறும் உறவுகள் அல்ல. கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய உறவுகள். ஜனாதிபதி தேர்தல்களின் போது இந்த கொடுக்கல் வாங்கல்கள் அதிகமாகவே இருக்கும். செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோருக்கு ரணில் விக்கிரமசிங்காவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. சுமந்திரனுக்;கும் , சாணக்கியனுக்கும் சஜித் பிரேமதாசாவுடன் தொடர்பு உள்ளது.

எனவே முடிவாக தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ்த் தேசிய கட்சிகள் பெரிதாக எதுவும் செய்யப்போவதில்லை. தமிழ் சிவில் தரப்பு தான் இதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். தமிழ் சிவில் தரப்பு தொடர்பாக பொது அபிப்பிராயத்தை கட்டியெழுப்பினால் தமிழ் தேசிய கட்சிகளை இதனை ஆதரிப்பதை தவிர வேறு தெரிவுகள் இருக்கப்போவதில்லை.

தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியாளருக்கு எதிராக போராடுவதற்கு முன்னர் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு எதிராக போராடுவதற்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய யதார்த்தம் இது தான் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு