தமிழர்கள் கௌரவமாக வாழவே இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது

Share

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தி நாட்டின் ஜனநாயக மரபைக் காக்குமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,

2024ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக ஜனாதிபதி கூறியிருக்கின்றார். அநேகமாக அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்கு முன்பாக ஜனாபதித் தேர்தல் நடைபெறும் என்றும் அதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

வருகிற 2024ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திலும் தேர்தலுக்கான நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஏற்கனவே வேட்பு மனுக்கள் கோரப்பட்டு கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் பலகோடி நிதியை வேட்புமனு தாக்கலுக்காக கட்டியுள்ளனர்.

ஆனால், தேர்தலுக்கு நிதி இல்லை என்று அரசாங்கம் சாக்குபோக்கு சொல்லி குறித்த தேர்தல் எப்பொழுது நடைபெறும் என்பது தெரியாத நிலையில் உள்ளது.

உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படலாம் என்றும் அதற்கான சட்டதிருத்தம் கொண்டுவரப்படும் என்றும் சொல்லப்படுகின்றது.

கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக மாகாணசபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாகாண சபைகளுக்கான எல்லை மீள்நிர்ணயங்கள் ஏற்றுக்கொள்ளப்படாததன் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டதாகவும் மீள்நிர்ணயம் செய்த பின்பு தேர்தல்கள் நடைபெறும் என்றும் பேசப்பட்டாலும் எல்லைகளை மீளவும் திருத்திக்கொள்வதற்கான எத்தகைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆகவே, மாகாண தேர்தல் சட்டதிட்டங்களுக்கு இணங்க மாகாணசபைத் தேர்தல்களை நடத்தும்படி தமிழர் தரப்பு கோரிய பொழுதும் அதற்கான எத்தகைய நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

மாறாக, வடக்கு-கிழக்கில் தான் விரும்பிய ஆளுநர்களை நியமித்து, தான்தோன்றித்தனமான முறையில் பௌத்த பிக்குகளும் இராணுவமும் பொலிஸாரும் கூட்டாக காணிகளைக் சுவிகரித்து, அத்தகைய இடங்களில் புதிது புதிதாக புத்த கோயில்களைக் கட்டுவதும் எங்கோ தூரப்பிரதேசங்களில் உள்ள சிங்கள மக்களைக் கொண்டுவந்து இங்கு குடியேற்றுவதுமாக அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்கின்றது.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒற்றையாட்சி முறைக்குள் அதிகார பரவலாக்கத்தின் ஊடாக மாகாணசபை முறைமை ஒன்று உருவாக்கப்பட்டது.

வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாணசபை முறைமை இல்லாவிட்டாலும் கூட, அதுவே இந்த அரசியல் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகவும் இருக்கின்றது. அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதற்காக அரசியல் சாசனத்தில் பதின்மூன்றாவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

மாகாணசபை அதிகாரத்தில் இல்லாத காலத்தில் நாடாளுமன்றத்தின் ஊடாகவும் ஏனைய வழிமுறைகளிலும் மாகாணத்திற்கு உரித்தான பல அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பறித்துக்கொண்டது. இன்றும் அது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இதனூடாக மாகாணசபை ஒரு அர்த்தமற்ற நிர்வாக அலகாக மாற்றப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, வாழ்வுரிமை மறுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனம் அச்சத்தில் வாழ்கின்ற சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளது.

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் தமது இருப்பைப் பாதுகாத்துக்கொண்டு கௌரவமாக வாழ வேண்டுமென்ற அடிப்படையிலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதுடன், பதின்மூன்றாவது திருத்தச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இன்று மாகாணசபைக்கான தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைத்து அதே சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள இருக்கின்ற ஜனாதிபதியோ அல்லது ஏனைய அரசியல் கட்சிகளோ தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள விரும்பின், குறைந்தபட்சம் வடக்கு-கிழக்கிற்கான மாகாண சபைகளுக்கான தேர்தல்களையாவது நடத்தி அதற்கான அதிகாரங்களை வழங்கி அந்த மாகாண நிர்வாகங்கள் திறம்பட செயற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரவேண்டும்.

சர்வதேச கடன்களை மீளச்செலுத்துவதற்கான காலங்கள் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் தேர்தல்களுக்கான நிதி இல்லை என்று கூற முடியாது.

ஆகவே, ஏனைய தேர்தல்களுக்கு முன்பாக குறைந்தபட்சம் வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களையாவது உடனடியாக நடத்த முன்வரவேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பாக அரசாங்கத்தைக் கோருகின்றோம்.” என்றும் குறித்த அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு