நீதிபதிக்கே நீதி இல்லாத நாடு அருட்தந்தை மா.சத்திவேல்

Share

நீதிபதிக்கே நீதி இல்லாத நாடு. இந் நாட்டில் நீதி தேடுவோர் பாதுகாப்போடு வாழ முடியாது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (02.10.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் அனைத்து அரச துறைகளும் அதிகார அரசியல் ஆதிக்கத்திற்குள் மிக நீண்ட காலமாக வைக்கப்பட்டுள்ளதை போன்று நீதித்துறையும் காலத்திற்கு காலம் அரசியல் மையப்பட்டுள்ளது. அது பேரினவாதத்தின் கொடூரத்துக்குள் சோரம் போய் உள்ளது என்பதை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அவர்களின் பதவி விலகல் வெளிப்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் தமிழர்களின் வரலாற்றுத் தன்மை, தேசிய அடையாளம், இருப்பு என்பன அனைத்தும் அழிக்கப்படும் பேரினவாதத்தின் செயல்பாடுகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தவும் எதிர் வரும் புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்குமாறும் வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும் அமைப்பு ரீதியில் தொடர் போராட்டங்களை ஒழுங்கு செய்யுமாறும் அரசியல் கைதிகள் விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வேண்டுகோள் விடுகின்றது.

நீதிபதி சரவணராஜா அவர்கள் உயிர் பாதுகாப்பு கருதியே வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இதற்கு நீதித்துறையும் பாதுகாப்புத் துறையும் நேரடி குற்றத்துறை என்றாலும் இந் நிலைக்குள் இத்துறைக்களுக்கு அழுத்தம் கொடுத்த பேரினவாத அரசியல்வாதிகளும், சிங்கள பௌத்த சமயவாதிகளுமே காரணம் எனில் நீதித்துறையும் அதிகார அரசியலுக்கும் பேரனவாதத்திற்கும் சோரம் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை தெளிவாக்கி இருக்கிறது.

நீதிபதிக்கே நீதி இல்லாத நாடு. நீதி தேடி வெளிநாட்டுக்கு தள்ளும் நாடு. இந்நாட்டில் நீதி தேடுவோர் பாதுகாப்போடு வாழ முடியாது என்று நீதிபதி அவர்கள் வெளிநாட்டில் காலடி வைத்துள்ளார்.இது இதுவரை காலமும் வெளிநாட்டில் தஞ்சமடைந்த அனைத்து தமிழர்களின் செயற்பாட்டையும், நீதி செயல்பாடுகளையும் நியாயப்படுத்துகின்றது . தமிழர்களுக்கு நியாயமான நீதி நிறைந்த எதிர்காலம் இல்லை நீதிக்காக போராடுவது உயிர் அச்சம் மிக்கது என்பதை சர்வதேசம் தெளிவாக உணரும் நேரமிது.

இதனை சர்வதேசத்துக்கு கூர்மைப்படுத்த வெளிநாட்டில் புகலிடமாக்கியுள்ள அனைத்து தரப்புக்களும் தமிழர் தேசத்தில் வாழும் மக்களின் பாதுகாப்பு கருதி சர்வதேச அரசியல் தலைமைத்துவங்களுக்கு கூட்டாக அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.

நாட்டின் பேரினவாதம் மீண்டும் எம்மை வலிந்து போராட்டத்துக்குள் தள்ளி உள்ளது. போராட்டத்தின் வடிவத்தை நாம் தீர்மானிப்போம். அரசியல் தலைமைத்துவங்கள் போராட்டத்தினை தமது அடையாள இருப்புக்காக மட்டும் பாவிக்காது தமிழர் தேசம் கோரும் அரசியல் தீர்வை நோக்கியும் போராட்டம் முன்னெடுக்க வேண்டும். கடந்த கால கசப்புகளை மறந்தும்; தமது சோரம் போன அரசியலை விட்டு விலகியும் போராட்டத்திற்கு கைகோர்க்குமாறு தமிழர் தேசம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு